Friday, September 15, 2006

Kausalya - கல்வி நிதி தொடர்பாக

அன்பான வலைப்பதிவு நண்பர்களே,

சிரமம் பார்க்காமல், இப்பதிவை முழுவதும் வாசித்து விடவும் என்ற கோரிக்கையோடு,
********************************
கௌசல்யாவின் மருத்துவக் கல்விக்கு பொருள் உதவி வேண்டி நான் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, பல நண்பர்கள் எனக்கு மடல் அனுப்பி, பணம் அனுப்புவதற்கான விவரங்களை கேட்டிருந்தனர். என் வேண்டுகோளை பலரும் வாசிப்பதற்கு வசதியாக, தமிழ்மணம் நிர்வாகம், வேண்டுகோள் பதிவின் சுட்டியை தமிழ்மணம் தளத்தின் முகப்பு பக்கத்தில் ஒரு வாரம் வைத்திருந்தது. இதுவும், சென்ற ஆண்டை விட, இவ்வாண்டு முயற்சிக்கு, அதிகமானோர் ஆதரவு அளித்ததற்கு ஒரு காரணமாய் அமைந்தது. திண்ணையும் எனது வேண்டுகோளை ஓர் அறிவிப்பாக வெளியிட்டிருந்தது. நண்பர் தேசிகனும் இது குறித்து ஒரு பதிவிட்டு இருந்தார். துளசியும் தேசி பண்டிட் தளத்தில் என் வேண்டுகோள் பற்றி எழுதியிருந்தார். தமிழ்மணம் நிர்வாகக் குழுவுக்கும், திண்ணை ஆசிரியர் ராஜாராம் அவர்களுக்கும், தேசிகனுக்கும், துளசிக்கும் நன்றிகள் பல !

இது வரை, என்னை மடல் வழி தொடர்பு கொண்டதின் தொடர்ச்சியாக, பண உதவி அனுப்பியவர்களுக்கும், அனுப்ப உள்ளவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உதவ நினைத்து ஏதோ ஒரு காரணத்தால் பலருக்கு இயலாமல் போயிருக்கலாம். அவர்களுக்கும் என் நன்றி. அடுத்த ஆண்டு முயற்சிக்கு உதவலாம். இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்து சொன்னவர்களுக்கும் நன்றி. இது வரை, என்னை மடல் வழி தொடர்பு கொண்டவர்கள் மட்டும் நிதியுதவி செய்தாலே, எனது இந்த ஆண்டு முயற்சிக்கு போதுமானது என்று குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த வேண்டுகோளை இனி வாசித்து உதவ நினைக்கும் நண்பர்கள் தங்கள் ஆதரவை எனது அடுத்த ஆண்டு முயற்சிக்குக் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கௌசல்யா தனது மருத்துவப் படிப்பை முடிக்கும் வரை உதவலாம் என்பது என் எண்ணம். இன்னும் சில ஏழை மாணவ / மாணவிகளுக்கு உதவலாம் என்ற எண்ணமுண்டு. எனவே, உங்கள் உதவி எதிர்காலத்தில் தேவைப்படும்.

கடந்த இரு வாரங்களாக, உதவ முன் வந்த நண்பர்களுக்கு மடல் வழி விவரங்களைத் தரவும், பணமாற்றம் குறித்த பிரச்சினைகளைத் தீர்க்கவும், அனுப்பிய தொகை வந்து சேர்ந்தது பற்றி தகவல் அனுப்பவும், கணக்குகளை சரி பார்க்கவும் செலவிட்ட நேரத்தை, மிகுந்த மனநிறைவோடும், உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் செலவிட்ட பணி நேரமாகவே பார்க்கிறேன் !!!

இதுவரை பணம் அனுப்பிய அனைவருக்கும் (ஒருவர் தவிர, யார் அனுப்பியது என்ற விவரம் சரியாக இல்லை!) பணம் வந்து சேர்ந்தது பற்றி மடல் வழி தெரிவித்து விட்டேன். பணம் அனுப்புவதாக ஏற்கனவே மடல் எழுதியுள்ள நண்பர்கள், பணமாற்றம் செய்யும்போது, தங்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடவும். அதோடு, விவரங்களை (தொகை, தேதி, transaction reference நம்பர்) எனக்கு உடனடியாக தெரிவித்தால், யார் அனுப்பியதை என்ற குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

கௌசல்யா, முதலாண்டு தேர்வு முடிந்து இப்போது விடுமுறைக்காக ஊருக்குச் சென்றுள்ளார். தேர்வை நன்றாக எழுதியிருப்பதாகக் கூறினார். அவர் சென்னை வந்தவுடன் நேரில் சந்தித்து, அவர் தேவைகளை கேட்டறிந்து, (திரட்டிய கூட்டுத் தொகையைக் கொண்டு) உதவி செய்வதாகக் கூறினேன். பல நல்ல உள்ளங்களிடமிருந்தும் உதவி பெற்று அவருக்கு வழங்குவதை நினைவில் கொண்டு நன்றாக படிக்குமாறு என்னளவில் அறிவுரை தந்துள்ளேன். வாழ்வில் உயரத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது.

அவருக்கு வழங்கியது போக, மீதமிருக்கும் தொகையில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில், 1099/1200 மதிப்பெண்கள் (பத்தாவது தேர்வில் 441/500) பெற்று, RKM பொறியியல் கல்லூரியில் B.E (IT) சேர்ந்திருக்கும் துர்கபிரியா என்ற ஏழை மாணவிக்கு (இவரைப் பற்றியும் விசாரித்து விட்டேன்) வழங்கலாம் என்று எண்ணம். உதவி செய்த நண்பர்களின் ஒப்புதலோடு, இம்மாணவியின் கல்விக்கும் இயன்ற அளவில் உதவிட நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் (பின்னூட்டமாகவோ, மடலாகவோ) தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக, தமிழ் வலைப்பதிவு வாயிலாக, ஒரு நல்ல முயற்சி தொடர்ந்து (இரண்டாமாண்டாக) பேராதரவு பெற்றுள்ளது. அதற்கு, பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக ! இது தொடர வேண்டும் என்பது நம் அனைவரின் எண்ணமும் என்று புரிந்து கொள்கிறேன்.
*******************************
என்றென்றும் அன்புடன்
பாலா

* 231 *

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

Sri Rangan said...

//அவருக்கு வழங்கியது போக, மீதமிருக்கும் தொகையில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில், 1099/1200 மதிப்பெண்கள் (பத்தாவது தேர்வில் 441/500) பெற்று, RKM பொறியியல் கல்லூரியில் B.E (IT) சேர்ந்திருக்கும் துர்கபிரியா என்ற ஏழை மாணவிக்கு (இவரைப் பற்றியும் விசாரித்து விட்டேன்) வழங்கலாம் என்று எண்ணம். உதவி செய்த நண்பர்களின் ஒப்புதலோடு, இம்மாணவியின் கல்விக்கும் இயன்ற அளவில் உதவிட நினைக்கிறேன். //

Bala,
Do it!
Life is often like a family contrasts live close together.

regards

Sri Rangan

dondu(#11168674346665545885) said...

உங்கள் நல்ல உள்ளத்துக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ச.சங்கர் said...

வாழ்த்துக்கள் பாலா
இந்த மாதிரி பதிவுகளைப் படிக்கும் போது மனம் நிறைவாகவும் , தமிழ் வலைப்பதிவர்கள் மீது அபிமானம் கூடுகிறது...நன்றி

enRenRum-anbudan.BALA said...

நன்றி, நண்பர்களே !

Santhosh said...

நல்ல பணி பாலா. உங்களின் பணி இப்படியே தொடரட்டும்

Santhosh said...

test :))

enRenRum-anbudan.BALA said...

Thanks for TESTING, Santosh :))))))))))

said...

Test :-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails